Pages

Wednesday, 21 December 2011

பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்

கவத் கீதைக்கு, ரஷ்யாவில் தடை கோரிய வழக்குக்கு, பார்லிமென்டில், நேற்று உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். "பகவத் கீதையை தேசிய புத்தகமாக அறிவிக்க வேண்டும்' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார்.

ரஷ்யாவின் "கிறிஸ்டியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்', சைபீரியாவின் டோம்ஸ்க் நகரில் உள்ள கோர்ட்டில்,
சமீபத்தில், "இஸ்கான்' அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த பிரபு பாதா எழுதிய, கீதை விளக்க உரையை தடை செய்யக் கோரி, வழக்கு தொடர்ந்தது. "வன்முறையைத் தூண்டும் இலக்கியமாக இருப்பதால், இந்த கீதை பிரசுரத்தை தடை செய்ய வேண்டும்' என, சர்ச் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.


இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு, இம்மாதம் 28ம் தேதி அளிக்கப்பட உள்ளது. பகவத் கீதைக்கு தடை கோரிய விவகாரம், லோக்சபாவில் நேற்று முன்தினமும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்யசபாவிலும் உறுப்பினர்கள் பலர், இப்பிரச்னை குறித்து விவாதித்தனர்.



பாரதிய ஜனதா உறுப்பினர் தருண் விஜய் குறிப்பிடுகையில், "பகவத் கீதை என்பது, சூரியன் மற்றும் இமயமலைக்கு சமமாகும். சூரியனையும், இமயமலையையும் தடை செய்ய முடியுமா? இந்த விவகாரம் குறித்து, மத்திய அரசு, ரஷ்ய அரசுடன் பேச வேண்டும். விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கூட, கீதையை படித்த பிறகு, எல்லாம் மிகப்பெரிய ஒன்றில்(கடவுள்) அடக்கம் என கூறியுள்ளார்' என்றார்.

பார்லிமென்ட் விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா குறிப்பிடுகையில், "ரஷ்ய அரசிடம் இதை தெரியப்படுத்தியுள்ளோம். இதற்காக, அந்த நாட்டு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்' என்றார்.



லோக்சபாவில், இது குறித்து, மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா குறிப்பிடுகையில், "கீதையை பற்றி கருத்து தெரிவித்தவர்கள் தவறான வழிகாட்டுதலின் பேரிலோ அல்லது உள்நோக்கத்துடனோ இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இது தொடர்பாக, ரஷ்ய அரசின் உயர் மட்ட நபர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டாள்தனமான இந்த வழக்கு குறித்து கண்காணிக்கும்படி, ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தெரியப்படுத்தியுள்ளோம். ரஷ்யா நமது நட்பு நாடு என்ற முறையில், இந்த விவகாரத்தை முறைப்படி கவனிக்கும். யாரோ தனி நபர் கொடுத்த புகார் தொடர்பாக, நாம் இதற்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கத் தேவையில்லை' என்றார். அமைச்சர் கிருஷ்ணா அளித்த விளக்க அறிக்கை, போதுமான அளவில் திருப்தியளிக்கவில்லை என்று கூறி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வாதிட்டார். இவரோடு சேர்ந்து, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்களும் கூச்சல் போட்டனர். "பகவத் கீதையை தேசிய புத்தகமாக அரசு அறிவிக்க வேண்டும். அப்போது தான், இந்த புனித நூலை எந்த நாடும் அவமதிக்காது' என, சுஷ்மா சுவராஜ் கோரினார்.


ரஷ்யா வேதனை: இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் குறிப்பிடுகையில், "பகவத் கீதை, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே நல்ல போதனையை தரக்கூடிய நூல். ரஷ்யா மத சார்பற்ற நாடு என்ற முறையில், அனைத்து மதத்துக்கும் சமமான மதிப்பை அளித்து வருகிறது. அழகான டோம்ஸ்க் நகருக்கு பக்கத்தில், கீதையை எதிர்த்து புகார் கூறக்கூடிய முட்டாள்தனமான மனிதர்களும், இருக்கத்தான் செய்கிறார்கள். இது வருந்தத்தக்கது. கீதை குறித்த சந்தேகம் இருந்தால், அது தொடர்பான வல்லுனர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம். அதை விட்டு, கோர்ட்டை அணுகியிருப்பது வேதனையானது' என்றார்.
maraththami lar senai

No comments:

Post a Comment